மேல்மலையனூர் தலத்தின் 50 மகிமைகள்

மேல்மலையனூர் தலத்தின் 50 மகிமைகள்
melmalayanur-angalamman

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியை பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குலதெய்வமாக போற்றி வழிபடுகிறார்கள்.

1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூரில் வழிபட உரிய பலன் கிடைக்கும்.

2. சில பெண்களை கணவன் அடிக்கடி துன்புறுத்துவது உண்டு. அப்படி பாதிக்கப்படும் பெண்கள் மலையனூர் வந்து அங்காளம்மனிடம் முறையிட பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

3.மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது.

4. ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள்.

5. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு.

6. மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடிவரும் என்பது ஐதீகம்.

7. மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

8. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.

9. அங்காளம்மனை ஆடி மாதம் ஒரு தடவையாவது சென்று வழிபட்டால், பக்தர்களை பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும்.

10. மேல்மலையனூருக்கு 3 அமாவாசை தொடர்ந்து வந்து அங்காளம்மனை வழிபட்டு ஊஞ்சல் ஊற்சவத்தை கண்டு வந்தால் குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, திருமண யோகம் ஆகியவை வந்து சேரும்.

11. அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

12. மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

13. மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் பெற்று, பிறகு மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திரு வண்ணா மலை செல்லும் பக்தர்கள் மலையனூர் வந்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது.

14. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியவரும்.

15. தக்கனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயினியன் அம்சமே அங்காளி என்பதால் மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத்தான் பிரசாதமாக தருகிறார்கள்.

16. அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால் ராகு-கேது தோஷ பாதிப்பு உங்களை நெருங்கவே நெருங்காது.

17. சென்னையில் சூளை, ராயபுரம், சாத்தங்காடு, மைலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஜார்ஜ்டவுன், நுங்கம்பாக்கம் என்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அங்காளம்மமன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

18. திருவள்ளூர் அருகே புட்லூர் அங்காளம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. அரக்கோணத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

19. திருச்சி மாவட்டம் துறையூர் அங்காளம்மன் சயன கோலத்தில் இருப்பதால் அந்த கோவில் மிகவும் விசேஷமானது.

20. திருப்பூர் அருகே முத்தளம் பாளையம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் அங்காளம்மன் சுயம்புவாகத் தோன்றியவர் என்று கூறப்படுகிறது.

21. அங்காளம்மன் ஆலயங் களில் மயானக்கொள்ளை நடக்கும் தினத்தில் அம்மனுக்கு பொங்க லிட்டு பூஜைகள் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

22. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல் மலையனூர் வந்து அங்காளம் மனை தரிசித்து செல்கிறார்கள்.

23. சமீப காலமாக மேல் மலையனூருக்கு ஆந்திரா, கர் நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

24. சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவா சைக்கும் மேல் மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

25. மேல்மலையனூருக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மற்றும் தங்கள்  குடும்பத்தினர் மீதான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே வருகிறார்கள்.

26. மேல்மலையனூர் தலத்தில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். அவர்களை தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

27. ஆலயத்தின் பின்புறம் அம்மன் பாதம் உள்ளது. நிறைய பக்தர்களுக்கு அதன் விவரம் தெரியாமல் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் அம்மனின் கருணை பார்வை உடனடியாக கிடைக்கும் என்கிறார்கள்.

28. ஆலயத்தின் முன் பகுதியில் அம்மனின் படுத்துக் கிடக்கும் சிலை உள்ளது-. அந்த அம்மனுக்கு பெரியாயி என்று பெயர். தட்சனின் யாகத்துக்குள் விழுந்து பார்வதிதேவி கலைத் தாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த அமைப்பு அமைந்துள்ளது.

29. பெரியாயி மல்லாந்து படுத்து இருக்கும் மண்டபத்தை சுற்றி 108 விநாயகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

30. ஆலயத்தின் ஒரு பகுதியில் காவல் தெய்வமான பாவாடை ராயன் சன்னதி உள்ளது. அங்கு இன்னமும் அசைவ படையல் போட்டு வணங்குகிறார்கள்.

31. மேல்மலையனூர் தலத்தில் தினமும் 2 கால பூஜை நடத்தப் படுகிறது. காலை 5.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் அபிஷேக ஆராதனையுடன் இந்த பூஜை நடைபெறும்.

32. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

33. மேல்மலையனூர் தலத்தில் மதியம் நடை மூடப்படுவதில்லை. காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பக்தர்கள் வழிபடலாம்.

34. அமாவாசை தினத்தன்று இரவிலும் நடை திறந்திருக்கும். விடிய விடிய பக்தர்கள் அங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்யலாம்.

35. மேல்மலையனூர் தலத்தில் திருஷ்டி கழிக்கும் பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தது கிடையாது. கடந்த 25 ஆண்டுகளுக்குள்தான் இந்த பழக்கம் உருவாகி இருக்கிறது.

36. எலுமிச்சை பழத்தை இத்தலத்தில் நிறைய பக்தர்கள் காலில் மிதித்து அவமரியாதை செய்கிறார்கள். அது புண்ணியத்தை சேர்ப்பதில்லை. பாவத்தைத்தான் தரும்.

37. எலுமிச்சை பழத்தை கோவில் வாசலில் வைத்து தலையை சுற்றி போட வேண்டும் என்று எந்தவித ஐதீகமும் கிடையாது. ஆனால் பக்தர்கள் ஒருவரை பார்த்து ஒருவர் செய்கிறார்கள். கோவிலுக்கும் இந்த பழக்கத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

38. அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின்போது சிலர் எலுமிச்சை பழத்தை அம்மன் சிலையை நோக்கி வீசு கிறார்கள். இதை தவிர்க்கும்படி பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

39. இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட உள்ளன.

40. பக்தர்கள் எளிதாக வழிபடுவதற்காக இத்தலத்தில் 5 வகை வரிசைகளை ஏற்படுத்தி உள்ளனர். அதில் இலவச தரிசன வகை ஒன்று. மற்றப்படி ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய 4 விதமான கட்டணம் செலுத்தியும் அம்மனை வழிபடலாம்.

41. சிவபெருமானுக்கும், சக்தி தேவிக்கும் பித்தம் தெளிந்ததால் அந்த ஐதீக அடிப்படையில் இத்தலத்துக்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நலம் பெறுகிறார்கள்.

42. மேல் மலையனூரில் மலையே கிடையாது. என்றாலும் மலையரசியான பார்வதி இத்தலத்தில் உறைந்ததால் மலையனூர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

43. அங்காள பரமேஸ்வரி என்ற பெயர் உருவானதற்கு பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன. பரமேசுவரனின் அங்கத்தின் இடது பாகத்தை ஆள வரம் கேட்டதால் பரமேஸ்வரிக்கு அங்காளபரமேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.

44. அன்னையின் அருள் பெற்ற வால்மீகி முனிவர் மலையனூரில் மோட்ச பதவி அடைந்தார்.

45. ஆதி காலத்தில் மலை யனூர் பகுதி ருத்ர ஆரண்யம் என்றழைக் கப்பட்டது. அது சக்தி பீடமானதும், ருத்ர சக்தி பீடம் என்று மாறியது. அதனால் அங்காளம்மனுக்கு பூங்கா வனத்தாள் என்ற பெயரும் உண்டு.

46.அம் + காளம் + அம்மன் = அங்காளம்மன் எனப்படுகிறது. அம் என்றால் உள்ளே, காளம் என்றால் விஷம் என்று அர்த்தமாகும். உள்ளே விஷம் கொண்ட நாகம். நாக வடிவில் அம்மன் புற்றுக்குள் இருப்பதால் இத்தலத்து அம்மன் அங்காளம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

47. விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு என்னும் இடத்திலும் அங்காளம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

48. இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

49. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.



50. அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் முகவரி: மேல்மலையனூர்-604 204, விழுப்புரம் மாவட்டம்.