ஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது எப்படி?

ஸ்ரீ நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது எப்படி?


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

மகாவிஷ்ணு எடுத்த 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

உலகில் அதர்மம் அதிகரித்த போதெல்லாம் மகா விஷ்ணு அவதாரம் எடுத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாவிஷ்ணு எடுத்த 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கான வரலாறு.

நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது.

அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.
பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

இந்த நிலையில் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் கயாதுக்கும் மகனாக பிரகலாதன் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.

பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.

இரணியன் ஒரு ஆயுதம் எடுத்து தன் எதிரில் இருக்கும் தூணை ஓங்கித் தாக்கினான். மறுவினாடி அந்த தூண் தூள், தூளாக வெடித்து இரண்டாகப் பிளந்தது. தூணில் இருந்து சிங்க முகத்தோடு கூடிய நரசிம்மர் வெளிப்பட்டார்.

அதாவது ஸ்ரீமந் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.சிங்கம் போன்ற திருமுகத்தில் தாடியுடனும், கோரைப் பற்களுடனும், சிவந்த கண்களுடனும், தலைக்கு கீழ்பாகம் மனித உடலுடனும், கூர்மையான நகங்களுடனும் தோன்றினார். புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்மர் இந்த பூமியில் அவதரித்தார். திருமாலின் நரசிம்ம வடிவம் எட்டுத் திசைகளையும் தாண்டி வளர்ந்தது. அந்த விசுவரூபத்தை முழுவதுமாகக் கண்டவர் யாரும் இல்லை. அரியின் பெரிய வடிவத்துக்கு இந்த உலகம் ஒரு தூசியைப் போன்று காட்சியளித்தது. கடல் ஒரு துளியைப் போலக் காணப்பட்டது.

பெருங்காற்றானது நரசிங்கப் பெருமாளின் சிறுமூச்சுப் போல இருந்தது. தூய்மையான ஆகாயம் அப்பெருமானின் விரல்களுக்கிடையில் காணப்படும் இடைவெளிக்குச் சமமாக இருந்தது. நரசிம்ம பெருமானின் வடிவத்துக்கு முன்னர் ஐம்பூதங்களும் மிகவும் சிறியதாகவே காணப்பட்டன.

தூணில் இருந்து தோன்றிய நரசிம்மத்துடன் போர் புரிய இரணியன் தயாரானான். தன் வாளை உருவினான். கடல்களும், மலைகளும் அஞ்சுமாறு பெரிய ஆரவாரம் செய்தான்.

அவன் எக்காளமாக சிரித்து முடிப்பதற்குள் இரணியனை நரசிம்மப் பெருமான் தன் கைகளால் பற்றினார். அவனை தன் தொடை மேல் கிடத்தி, தன் கூர்மையான நகங்களால் அவன் மார்பினைப் பிளந்தார். பிறகு ரத்தம் பொங்கும் அவன் குடலினை உருவினார். அதை மாலையாகத் தன் மார்பில் அணிந்து கொண்டார்.

இரணியன் இறந்தது கண்டு எல்லோரும் ஆரவாரம் செய்தனர். ஆனால் நரசிம்மனின் ஆக்ரோசம் தணியவில்லை. இதனால் அவர் அருகே செல்ல பயப்பட்ட அமரர்களும், பிறரும் லட்சுமியின் திருவடிகளை வணங்கி நின்றனர். நரசிம்மரின் சீற்றம் தனிய அருகில் செல்லுமாறு திருமகளை வேண்டிக் கொண்டனர். ஆனால் லட்சுமியும் அவர் அருகே செல்ல அஞ்சினாள்.

பலரும் வேண்டி நின்றும் அரியின் சீற்றம் தணியவில்லை. ஆனால் பிரகலாதன் மட்டும் நரசிம்மரின் திருவடிகளை வணங்கி ஆனந்தத்தில் மூழ்கியிருந்தான். சிறுவனாகிய பிரகலாதனின் பக்தியைக் கண்டு நரசிம்மப்பெருமானின் கோபம் தணிந்தது. பிரகலாதனை அன்புடன் தன் கரங்களால் தடவிக் கொடுத்தார்.

பிரகலாதன் நீ விரும்பும் வரத்தைக் கேள் என்று நரசிம்மப் பெருமாள் கூறினார். உடனே பிரகலாதன் உம்மை அன்புடன் வழிபடும் வரம் ஒன்றே எனக்கு வேண்டும் என்றான்.

பிரகலாதன் சொன்னதைக் கேட்டுத் திருமால் உள்ளம் குளிர்ந்தார். நீ விரும்பவில்லை என்றாலும், சில காலம் இவ்வுலகத்தை ஆளும் பேரரசனாக அனைவரும் போற்ற ஆட்சி புரிந்து வருவாயாக! உலக இன்பத்தை அனுபவித்த பின்னர் என்னிடம் வந்து சேர்வாயாக என்று நரசிம்மர் அருளினார்.

அரியின் திருநாமத்தை அன்புடன் சொல்லி வணங்கினான் பிரகலாதன். அனைவரும் பயம் நீங்கித் திருமாலின் திருவடிகளை வணங்கித் துதித்தனர்.

அனைவருக்கும் வரங்கள் தந்து மறைந்தார் வைகுந்தவாசன். நாராயணா எனும் நாமம் எங்கும் ஓங்கி ஒலித்தது.

பிரகலாதனின் அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே திருமால் நரசிம்மப்பெருமானாக அவதாரம் எடுத்தார். தன்னை மனம் உருகி அழைப்பவர்களுக்கு நொடியில் வந்து உதவி செய்வதை நரசிம்ம அவதாரம் நமக்கு உணர்த்துகிறது.

அது மட்டுமின்றி இறைவன் எங்கும் உள்ளார் என்பதை நரசிம்ம அவதாரம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.